அண்ணல் நபிகள் நாயகம் ஒரு மாமனிதர். அவரைக் குறித்து,சண்டையும் சச்சரவும் நிறைந்த குலம் கோத்திரங்களையும், நாடோடிகளையும் தமது தனி முயற்சியால் இணைத்து ஒரு இருபது ஆண்டுகளுக்குள்ளேயே நாகரிகம் மிகுந்த பலம் பொருந்திய சமுகமாக எவ்வாறுதான் அவரால் உருவாக்க முடிந்ததோ என்று வரலாற்று ஆசிரியர் தாமஸ் கார்லைஸ் வியந்து எழுதினார். தம்முடைய ‘யங் இந்தியா’ பத்திரிகைகளில் முகம்மது நபியின் உயர் பண்புகளைக் குறித்து மகாத்மா காந்தி எழுதியதைப் பாருங்கள்.
இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஒர் இடத்தைப் பெற்றுத் தந்ததுவாள் பலமல்ல என்று முன் எப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன். நபிகள் நாயகத்தின்மாறாத எளிமை,தம்மைப் பெரிதாகக் கருதாமல் சாதாரணமானவராக நடந்து கொள்ளும் உயர் பண்பு,எந்நிலையிலும் வாக்குறுதியைப் பேணிக்காத்த தன்மை,தம் தோழர்கள் மீது அவர்கொண்டிருந்த ஆழ்ந்த அன்பு,அவரது அஞ்சாமை,இறைவன் மீதும் தமது பிரசாரப் பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவை தாம் அவரது வெற்றிக்குக் காரணங்கள்.
இஸ்லாம் ஒரு போராளிகளின் மதம் என்றொரு தோற்றம் இருக்கிறது. வாள் பலம் கொண்டேஇஸ்லாம் பரவியது என்றும் வாள் பலத்தைக் கொண்டு இஸ்லாமியர் மற்றவர்களை அச்சுறுத்துகிறார்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இஸ்லாமிய இயக்கம் ஒரு பெரும் போராட்டத்திற்குப் பிறகே முன்னேறியது என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.
அண்ணல் நபிகள் நாயகம் இறைவனின் தூதராக நியமிக்கப்பட்டதை நபித்துவம் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. நபிகள் நாயகத்தின் பணியை இஸ்லாம் அழைப்புப் பணி என குறிப்பிடுகிறது. இந்த அழைப்புப் பணியை இரண்டு கால கட்டங்களாகப் பிரிக்கலாம். முதல் காலகட்டம் மக்கா நகரில் நடந்த சகாப்தம். இது 13 ஆண்டுகள் நீடித்தது. இரண்டாவது கால கட்டம் மதனீ சகாப்தம். இது 10 ஆண்டுகள் நீடித்தது. மக்கீ சகாப்தத்தில் நபிகள் நாயகத்தின் மீதும் அவருடைய அழைப்புப் பணியின் மீதும் சொல்லொணாத கொடுமைகளும், அக்கிரமங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டன.
அன்றைய அதிகாரவர்க்கத்தினர் நபிகள் நாயகத்தை பைத்தியக்காரர் என்று பழித்தார்கள். அவருடைய பேச்சைக் கேட்கயாரும் போகக் கூடாது என்று தடை விதித்தார்கள். முஸ்லிம்களைக் கண்ட போது அவர்களைத் திட்டினார்கள். வசை பாடினார்கள். ஆயினும் இஸ்லாமிய அழைப்பின்பால் மக்கள் கவனம் திரும்பிஏராளமானவர்கள் திரண்டார்கள். தன்னுடைய இறுதி ஆயுதமாக வன்முறையை அதிகாரவர்க்கம் ஏவி விட்டது. முஸ்லிம்கள் மீது இழைக்கப்பட்ட துன்பங்கள் அவர்களால் தாங்க முடியாத அளவிற்குச் சென்று கொண்டிருந்ததைப் பார்த்த பிறகு,மக்கா நகரிலிருந்து வெளியேறுவது என்று நபிகள் நாயகம் முடிவெடுத்தார்.
மக்கீ சகாப்தம் ஒரு பெரும் போராட்ட காலமாக இருந்தது.பிறகுதொடங்கியதே மதனீ சகாப்தம். தம்மையும் தம்முடைய மதத்தையும் தற்காத்துக் கொள்ளவே முஸ்லிம்கள் போராட்டக் குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. அரசியல் மற்றும் காழ்ப்பு உணர்வுகளின் காரணமாகவே இஸ்லாத்திற்கு எதிராக அவதூறு பிரச்சாரம் நடந்தது என்பதே உண்மை.
பேராசிரியர் பெவான் என்னும் வரலாற்று நூலாசிரியர், முகம்மதைப் பற்றியும் இஸ்லாம் பற்றியும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுதப்பட்டவையெல்லாம் இலக்கிய விந்தைகளாகி விட்டன என்று குறிப்பிடுகிறார். இஸ்லாம் ஏகத்துவம், மறுமை ஆகிய கோட்பாடுகளை வலியுறுத்துகிறது. ஒரே இறைவன் என்பது மூலக்கோட்பாடு. அவனை ஒத்ததோ, விஞ்சியதோ ஏதுமில்லை. அவன் அதிபதி. அவனிடம் எந்த குற்றமும், குறையும் காண முடியாது.
அவன் உடல்களை உருவாக்கியவன். ஆன்மாவை உண்டாக்கியவன். அவனே இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதி. இதுவே ஏகத்துவம். உங்களுள் மறைந்திருப்பவையும், இந்த உலகில் உங்களிடமிருந்து மறைக்கப்பட்டவையும் மறுஉலகில் உங்கள் முன் வெட்ட வெளிச்சமாகிவிடும் என்பது மூலக்கோட்பாடு. இதுவே மறுமை. இந்த அடிப்படைக் கோட்பாடுகளில் என்ன குற்றத்தைக் காண முடியும்? எல்லா மதங்களிலும் அடிப்படைக் கோட்பாடுகளைச் சிதைப்பவர்கள் இருக்கிறார்கள். காலப்போக்கில் பல மூட நம்பிக்கைகளும் மலிந்து விடுகின்றன.
மதம் என்பது ஒரு போர் வாளாக மாறிவிடுகிறது. இந்து சமயத்திலும், கிறிஸ்துவ சமயத்திலும், யூத சமயத்திலும் தீவிரவாதிகள் இருப்பதைப்போல் இஸ்லாத்திலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள். இந்த தீவிரவாதிகளினால்தான் மதங்களிடையேபகை வளர்கிறது. இந்தத் தீவிரவாதிகளின் சொல்லையும் செயலையும் கொண்டு ஒரு மதத்தை மதிப்பிடக்கூடாது.
திருக்குர் ஆனைப் படிப்பதற்கும், நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பதற்கும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். திருக்குர்ஆன் ஓதப்பட்ட காலம் கி.பி.610. ஓர் எழுத்துக் கூட மாறாமல் எந்த இடைச் செருகல்களுக்கும் உள்ளாகாமல் ஒரு நூல் உள்ளது என்றால் அது திருக்குர்ஆன் மட்டுமே என்று சர் வில்லியம் மூர் குறிப்பிடுகிறார்.
திருக்குர் ஆனை ஏற்று நபிகள் நாயகத்தை இறைத்தூதராகப் போற்றும் இஸ்லாமிய சமுதாயத்தினர் மற்ற மதங்களைச் சார்ந்தவர்களின் சகோதரர்கள் என்ற உணர்வு பரவ வேண்டும் என்று விழைகிறேன்.
( குடவாசல் புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவினையொட்டி வெளியிடப்பட்ட அருள் வசந்தம் எனும் மலரிலிருந்து )
தகவல் : இனியவன் ஹாஜி முஹம்மது