அல்லாஹ் என்பது தமிழ்ச் சொல்லா?

(இதனை இணயத்தில் பதிவுச் செய்த தம்பி சுலைமானுக்கு நன்றி உரித்தாகுக)

இஸ்லாம் கூறுகின்ற ஒரிறைக் கொள்கையும், மாந்தரினம் ஒன்றே என்ற கொள்கையும், மனிதவாழ்வு இம்மை-மறுமை தொடர்புடையது என்னும் கொள்கையும், தமிழகத்திற்கு இஸ்லாம் அறிமுகப்படுத்திய கொள்கைகள் என்பதைவிட, இஸ்லாம் மூலம் , தமிழகத்தில் நினைவுபடுத்தப்பட்ட கொள்கைகள் ஆகும்; என்பதே, வரலாறு காட்டும் உண்மையாகும்!

‘ஒருவனே தேவன், ஒன்றே குலம்’ மற்றும் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’(கிளையார்) எனும் கொள்கைகள், தொன்றுதொட்டே தமிழகத்தில் நிலவி வந்தவையாகும்! ஆகவே இஸ்லாம் மூலம் வந்துள்ள கொள்கைகள், இஸ்லாம் தந்துள்ள கொள்கைகள் என்பதை விட, தமிழகத்தில் அவை பண்டைய காலம் தொட்டு இருந்துள்ள கொள்கைகள் என்பது தெளிவாகிறது.

திரு கி.ஆ.பெ. அவர்கள் குறிப்பிடுவது. ‘தமிழகத்தில் ஓரிறைக் கொள்கை, மாந்தரினம் ஒரே குடும்பம் எனும் கொள்கை. உலக மக்கள் யாவரும் ஒரே கிளையார் எனும் கொள்கை சைவநெறிக் கொள்கைகளானக போற்றப்பட்டு வந்துள்ளன!’

இதே கொள்கைகளை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அரேபியாவில், நிலை நிறுத்தியதோடு, வையெமெங்கும் அக்கொள்கைகளை பரவ்ச் செய்துள்ளார்கள். தமிழகத்தில் வரையறுத்துக் கூறமுடியாத வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்து நிலவி வந்த கொள்கைகள், இஸ்லாம் மூலம் உலகம் முழுவதிலும் பரவியுள்ளன. தமிழகத்தில் சைவநெறியாக இருந்தது. இன்றைக்கு உலகம் முழுவதிலும் இஸ்லாமிய நெறியாக் திகழ்கிறது என்று முத்தமிழ்க் காவலர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாம் போற்றும் கொள்கைகள் அரபகத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்துள்ளன; என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. இக்கொள்கைகள் இஸ்லாம் என்ற பெயரில் வருவதற்கு முன்னரே, அவை தமிழகத்தில் இருந்தன என்பதற்கும் சான்றுகள் உள்ளன! இஸ்லாம் காட்டும் ஓரிறைக் கொள்கையை, ஏகத்துவத் தத்துவம் என்பர். இதனை அல்லாஷ் எனும், இறைவனின் திருப்பெயர் மூலம், இஸ்லாம் தெளிவுப்படுத்தி இருக்கிறது.

அல்லாஹ் எனும் அரபிச்சொல், இன்று உலகெங்கும் தெரிந்திருக்கிறது. நபிகள்நாயகம் (ஸல்) பிறப்பதற்கு முன்னால், அரபிமக்கள் மத்தியில், ‘அல்லாஹ்’ எனும் சொல், வழக்கில் இருந்திருக்கிறது. நபிகள் (ஸ்ல) அவர்களின் தந்தையார் பெயர் அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடியார் -என்பதாகும்) மக்காவில் உள்ள கஃபாவில் 200விக்கிரகங்கள் இருந்தன. ஆனால், அவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டதொரு ஏக இறைவன் உண்டு; என்றும், அவனே ‘அல்லாஷஹ்’ என்றும், அரபுமக்கள் தெரிவித்திருந்தனர். இறைவன் ஒருவனே எனபதும், அவனுடைய பெயர் அல்லாஹ் என்பதும், இஸ்லாமிய எழுச்சிக்கு முன்னரே அரபிகள் அறிந்திருந்த உண்மைகள் ஆகும்!

திருக்குர்-ஆன் திருநபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது; கி.பி. 7-ம் நூற்றாண்டின் முற்பகுதியில். திருக்குர்-ஆன் அல்லாஹ் அருளிய வேதம்! அதன்பின்னரே அல்லாஹ் மக்களால் ஏற்றுப் போற்றும், இறைவனின் திருப்பெயரானது. ஆனால், அராபியர்களுக்கு இச்சொல் அதற்கு முன்னரே தெரிந்ததாக இருக்கிறதே? அராபியர்களுக்கு இச்சொல்லைக் கற்பித்தது யார்? அவர்களுக்கு அச்சொல் எங்கிருந்து வந்தது?

ஓரிறைத் தத்துவம் தமிழகத்தில் இருந்தது. அப்படியெனில், தமிழகத்தில் ‘அல்லாஹ்’எனும் சொல் வழக்கில் இருந்ததா?

12-ம், நூற்றாண்டு வைணவ இலக்கியத்தில், “ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன் காணலுமாகான்” எனக் குறிப்பிடப்பட்டதாக கா.சு. பிள்ளை தமிழ்ச்சமயம் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். சைவ மத கடவுளாகக் கருதப்படும் சிவபெருமானுக்கு “அல்லாமாத்தேவர்” எனப் பெயருண்டு என பேராசிரியர் பி.கே. வேலாயுதம் கருத்துத் தெரிவிக்கிறார். அதனால்தான் இறைவனை, ஆணல்ல, பெண்ணல்ல, அலியுமல்ல என்று தேவாரம் குறிக்கிறது என்கின்றனர். வீர சைவர்கள் தங்களின் கடவுளை “அல்லாமா” என்னும் இறைவனுக்கு உருவமில்லை என தெலுங்கு ஆங்கில அகராதி குறிப்பிடுகின்றது; என தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ள இஸ்லாமும்-தமிழகமும் எனும் நூலில் காணப்படுகிறது.

பண்டித சுந்தர்லாலின் THE GEETA AND THE QURAN எனும் நூலில் (பக்கம் 5) எல்லம் வல்ல இறைவனை திருக் குர்-ஆன் அல்லாஹ் என நாமமிட்டு அழைக்கிறது. ரிக் வேதத்தில் ஈஸ்வரன் “இலா” என் அழைக்கபடுகின்றான். இலா என்னும் சொல்லின் மூலம் “எல்” ஆகும். “எல்” என்றால், புகழுக்குரியது, வணங்குதற்குரியது எனும் பொருளாகும்.

ரிக் வேதத்திலுள்ள ஒரு முழு சுலோகம் “இலா” எனும் இறைவனிடம் இறைஞ்சுவதாக உள்ளது. ஏறத்தாழ 6000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சுமேரிய மொழியில் இறைவனுக்கு “எல்” எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுமேரிய நகரான பாபிலோன் உண்மையில் “பாப்எல்” என்றே அழைக்கப்பட்டது. “பாப்எல்” என்றால் “எல்” லாகிய ‘இறைவனின் வாயில்’ என்றே பொருளாகும்.

யூதர்களின் வேதமாகிய “தெளராத்” என்ற நூலிலும், பார்ஸிகளின் வேதமாகிய “ஜென்ட் அவைஸ்தா” என்ற நூலிலும், “எல்” எனும் சொல் அநேக இடங்களில் வருகிறது. ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டப்போது, “எல்லி எல்லி” என்றனர்; அதாவது என் இறைவனே, என் இறைவனே என்றனர். (இஸ்லாமிய மரபில் ஏசுநாதர் (ஈஸா நபி ஸல்.) சிலுவையில் அறையப்படவில்லை; என்ற கொள்கையில் உறுதியாக உள்ளது.)

“எல்” என்பது பொதுவாக “இலைஹா, இலாஷ்” என்றே ஹிப்ரு, சிரியாக், சால்தியா மொழிகளில் வருகிறது. இதிலிருந்து ஓர் உண்மைத் தெளிவாகிறது. ரிக் வேதக் காலத்திலிருந்து , தற்காலம் வரை, அல்லாஹ் எனும் சொல் ஏதோ ஒரு வடிவத்தில், இறைவனைக் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது; என்பது புலனாகிறது என சுந்தர்லால் கூறுகிறார்.

ரிக் வேதத்திற்கு முந்தியது தமிழ்மொழி என்பது தமிழரறிஞர்களும்-மொழி ஆய்வாளர்களும், கண்டுள்ள உண்மையாகும். மிகப் பழமையான தமிழ்மொழியில், “எல்” எனும் சொல்லும் அதற்கு இறைவன் எனும் பொருளும் இருந்துள்ளது எனக் கண்டறியப்பட்டால், தமிழகத்திலும் அல்லாஹ்தான் ஆதியில் இறைவனாகப் போற்றப்பட்டுள்ளது; எனத் தெரியலாம்!

வரலாற்றிஞர் திரு ந.சி. கந்தையாப்பிள்ளை “ஈழம்” எனும் பெயர் “எல்” என்பதன் திரிபு என்கிறார். (பழந்தமிழர். பக்கம் 18-19) தெனபுலோலியூர் மு.கணபதி பிள்ளை அவர்களும், இக்கருத்தை செந்தமிழ்ச் சேர்ந்த, பன்னிரு நிலத்தில் ஒன்றாகிய ஒளிநாடுதான் “எல்லம்” எனலாம். “எல்லே இலக்கம்” என்றது தொல்காப்பியம். “எல் ஒளிஇலக்கம்” என்ற பொருளைத் தருவதே இலங்கையாகும்!

இலக்கம் என்ற சொல் “லகி, லக்திப” என நின்று சிங்கள மொழியில் இலங்கையைக் குறிப்பதாகும். எல்நாடு (ஒளிநாடு) எல்லம் எழு (ஏழ்) நாடு-ஏழம், ஈழம் எனவாயிற்று என வலியுறுத்தினார். (வால்மீகியார் தமிழரே. பக்கம் 64-65) கணபதிப் பிள்ளை மேலும் குறிப்படுவது; “எல்” நாட்டின் “எல்” மலையின் மேவிய கடவுளே எல்லப்பன் எனப்பட்டான். இந்த எல்லப்பனே செல்லப்பன் ஆயினான். செல்லையனும் அப்படியே; எல்லப்ப நாவலர், எல்லப்ப நயினார், எல்லப்ப பூபதி என்றும் வழங்கப்பெறுவார்.

மதுரையில் நடைப்பெற்ற 5வது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில், உரை நிகழ்த்திய முனைவர் ஜே.டி. சேவியர் கூறுவது, ஆதி திராவிடத்தில் எழுத்துக் கடவுள் என்ற கருத்தைத் தரும் பட்டங்களாகிய “எலி ஊசா எல் ஏலி அலி” என்பவற்றைச் செமித்திய இனத்தவர்கள், தமது மொழியில் உள்வாங்கி, தமது தெய்வங்களை “எல் எலி அலி” போன்ற பெயர்களைக் கொண்டு அழைத்தார்கள். விவிலிய தீர்க்கதரிசிகளின் பெயர்களான, “எலிசா, எலிஜா, எலிசபெத்” என்பன திராவிட எழுத்துக் கடவுளின், பட்டங்களின், திரிபுகளாகக் காணப்படுகின்றன. (இந்து சமயத்தின் மொழி. பக்கம் 22-23)

செமித்திய இனம் என்பதும் அரேபியரைக் குறிக்கும் சொல்லாகும். இதிலிருந்து “எல்” எனும் சொல் இறைவனைக் குறிக்கிறது; என்பதும் அச்சொல் ஆதி தமிழகத்தில் மக்கள் மத்தியில் நிலவியது என்பதும், தமிழகத்திலிருந்து அச்சொல் வடபுலத்திற்கும், செமித்திய இனமாகிய அரபுகள் வாழும், மத்தியத் தரைக்கடல் பிரதேசங்களுக்கும், சென்றுள்ளது என்பதும், அச்சொல்லே அல்லாஹ் எனும் சொல்லின் மூலம் என்பதும், ‘அல்லா’ என்பது அரபகத்தில் அல்லாஹ் எனும் வழக்காக ஆகியுள்ளது என்பதும், அந்த அல்லாஹ்தான், இஸ்லாம் மூலம் தமிழகத்திற்கு மீண்டும் திரும்ப வந்துள்ளது; என்பதும் நிருபணமாகிறது.

“எல்” எனும் சொல்லுக்கு ஒளிக்கடவுள் என்னும் பொருள் விவரிக்கப்படுவதைக் கண்டோம்.

தொல்காப்பியம் புறத்திணையின் சூத்திரம்…

கொடிநிலை கந்தழி வள்ளியென்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன
முன்றுங் கடவுள் வாழ்த்தொடு
கண்ணியமே வருமே

இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கிணியர், கொடிநிலை வெங்கதிர் சூரியன் எனவும், வள்ளி இடை நின்ற கந்தழி ஒரு பற்றுக் கோடுமின்றி, அருவாகித் தானே நிற்கும் தத்துவம் கடந்த பொருள் ஆகும்! என விவரித்துள்ளார்.

ஆதித் தமிழர் இறைவனை உருவமற்ற அருவமாகவே வழுபட்டுத் தொழுதனர். இதை கா.சு. பிள்ளை, முழு முதற்கடவுளின் உண்மையும் – தன்மையும் உணர்ந்து, அவரை அருவமாக வழிபடக் கருதிய தமிழர், அவருடைய குணங்களையும் நினைத்து அவரைத் தொழுதனர். அந்நெறியே தமிழர் செந்நெறியாகும் என விவரித்துள்ளார். (தமிழர் சமயம். பக்கம் 8)

இதில் எதிலும் எனது கருத்துக்கள் இல்லை. இவை எல்லாம் ஆராய்ச்சி வல்லுனர்கள் எழுதியவையாகும். இதன் தொடர்பாக உங்களின் கருத்துக்களை-அபிப்பிராயங்களை அறிய விரும்புகிறேன்.

அன்புடன்
சுலைமான்.

Leave a Reply